Archives: செப்டம்பர் 2019

உடனடி பரிகாரம்

அந்த வன வழிகாட்டியைப் பின் தொடர்ந்து சென்று, மிகவும் பழமை வாய்ந்த, பஹாமியன் காட்டிலுள்ள தாவரங்களைக் குறித்து, அவர்  கொடுக்கும் குறிப்புகளை வேகமாக எழுதிக் கொண்டேன். சில மரங்களின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார். அந்தக் காட்டிலுள்ள ஒரு நச்சு மரம் கருமையான, ஒரு வகை திரவத்தை வெளியிடும். அது நம்மேல் பட்டால் வலியையும், ஊறலையும், தடிப்பையும் கொண்டு வரும். ஆனால் அதனைக் குறித்து கவலை கொள்ள வேண்டாம், ஏனெனில், இதற்கான மாற்று மருந்து அம்மரத்தின் அருகிலேயே கிடைக்கும். “எலீமி மரத்தின் சிவந்த பட்டையை சற்று வெட்டினால், அவ்விடத்தில் ஒரு வகை பிசின் சுரக்கும். அதை ஊறல் உள்ள இடத்தில் தடவினால், ஊறல் உடனே மறைந்து விடும்” என்றார்.

நான் ஆச்சரியத்தில் திகைத்து நின்றேன். நான் இத்தகைய ஒரு மீட்பின் செய்தியை இந்தக் காட்டினுள் எதிர்பார்க்கவேயில்லை. எலிமி மரப்பிசினில் நான் இயேசுவைக் கண்டேன். பாவமாகிய நச்சு நம்மைத் தீண்டும் போது, பரிகாரியாகிய இயேசு நம்மண்டை ஆயத்தமாக இருக்கின்றார். அந்த மரத்தின் பட்டையைப் போன்று, இயேசுவின் இரத்தம் நமக்கு சுகத்தைத் தருகின்றது.

மனித குலம் சுகத்தைப் பெற்றுக்கொள்ள ஏங்கி நிற்பதை ஏசாயா தீர்க்கதரிசி புரிந்து கொண்டார். பாவத்தின் விளைவு நம்மை வியாதிக்கு உட்படுத்தியது. நம்முடைய பாடுகளை தன்மீது ஏற்றுக்கொண்ட தேவக் குமாரனின் துன்பத்தின் வழியாக நமக்குத் தேவையான சுகம் வருகிறது என ஏசாயா தீர்க்கன் வாக்களிக்கின்றார் (ஏசா. 53:4). அந்த தேவக் குமாரன் தான் இயேசு கிறிஸ்து. நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டார், நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கும் போது, நம்முடைய பாவத்தின் ஆக்கினையிலிருந்து மீட்கப்பட்டு, சுகம் பெறுவோம் (வச. 5) நம்முடைய பாவங்களை கண்டுணர்ந்து, அவற்றை தள்ளி விட்டு, நமக்குத் தரப்பட்டுள்ள புதிய அடையாளத்தை பெற்றுக் கொண்டவர்களாய், பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றவர்களாய் வாழ, நம் வாழ்நாளெல்லாம் செலவிட்டாலும், அது இயேசுவிடமிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

நான் யார் ?

டேவ், தன்னுடைய வேலையை ஆர்வத்தோடு செய்து கொண்டிருந்தான். ஆனால், நீண்ட காலமாக அவன் ஏதோவொன்றை நோக்கி இழுக்கப்  படுவதை உணர்ந்தான். இப்பொழுது ,அவன் தன் கனவினை நனவாக்க, தேவபணி செய்யும் படி காலெடுத்து வைத்துள்ளான். ஆனால் அவனுக்குள் அநேக சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன.

அவன் தன் நண்பனிடம்,” நான் இந்த பணிக்குத் தகுதியானவன் அல்ல” என்றான். “இந்தப் பணிக் குழு என்னுடைய உண்மையான குணத்தை அறிந்திருக்கவில்லை. நான் நல்லவனல்ல” என்று கூறினான்.

டேவ்வைப் போன்ற ஒருவரான மோசேயை நினைத்துப் பார்ப்போம். அவருடைய தலைமைத்துவ பண்பும், பெலனும், பத்து கட்டளைகளுமே நம் நினைவிற்கு வருகின்றன. ஆனால் மோசே, ஒரு மனிதனைக் கொன்று விட்டு வனாந்திரத்திற்கு ஓடிப்போனதை நாம் மறந்து விடுகிறோம். அவருடைய முன் கோபத்தையும், தேவன் அழைத்த போது உடனே சரியெனக் கூறத் தயங்கியதையும் நாம் பெரியதாக நினைப்பதில்லை.

  தேவன் புறப்படும் படி கட்டளை கொடுத்த போது (யாத். 3:1-10), மோசே தனக்கு போதிய தகுதி இல்லையென தட்டிக் கழிக்கின்றான். அவன் தேவனோடு நீண்ட வாக்கு வாதங்களைச் செய்கின்றான். தேவனிடம், “நான் எம்மாத்திரம் ?” (வச. 11) எனக் கேட்கின்றான். தேவன் அவனிடம் “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” (வச. 14) என்கின்றார். இந்த மர்மப்பெயரை நம்மால் விளக்க முடியாது. நம்முடைய விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட தேவன் தன்னுடைய முடிவில்லாத தன்மையை மோசேக்கு விளக்குகின்றார்.

நம்மை பெலவீனனாக  காட்டும் உணர்வு நமக்குள் வலுவாக உள்ளது. தேவன் நம்மை பயன்படுத்துவதற்குத் தடையாக நாம் இதனை பயன்படுத்துவோமாயின் நாம் அவரை துக்கப்படுத்துகின்றோம். நம்முடைய பெலவீனங்களைப் பெரிதாக்கி, அவருடைய பணியைச் செய்ய மறுக்கும் போது, தேவன் நமக்குப் போதுமானவராக இல்லை என கூறுகின்றோம்.

நான் யார்? என்பது கேள்வியல்ல, இருக்கிறவராக இருக்கிறேன் என்றவர் யார் என்பதே கேள்வி.

அதுவே அலுவலகமும் கூட

வடக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள லங்காஷயரைக் கடந்து சென்ற போது, என் கண்கள் பசுமையான மலைத் தொடர்களையும், அதன் அடிவாரத்தில் கல்வேலிகளில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டு மந்தைகளையும் பார்த்தன. திரண்ட மேகங்கள் பிரகாசமான வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. இக்காட்சி என் மனதில் பதிந்துவிட்டது. நான் காணச் சென்ற தியான மையத்தில் பணிபுரியும் பெண்ணிடம் இக்காட்சியைக் குறித்து சொன்ன போது, அவள்,” என்னுடைய விருந்தாளிகள் இவற்றைக் குறித்துச் சொல்லும் போதேயன்றி, மற்றபடி நான் அவற்றை கவனிப்பதேயில்லை, ஏனெனில் நாங்கள் இப்பகுதி யிலேயே அநேக ஆண்டுகளாக வசிக்கின்றோம். நாங்கள் விவசாயிகளாக இருந்த போது, இக்காட்சிகள் தான் எங்கள் அலுவலகமும் கூட !” என்றாள்.

நம் கண்களுக்கு எதிரே இருக்கின்ற அழகினை- அதுவே நம் வாழ்வின் ஒரு பகுதியாக அமைந்து விடும் போது, நாம் அதைக் காணத் தவறி விடுகின்றோம். இயேசுவின் விசுவாசிகளான நாம், நம்முடைய ஆன்மீக கண்களைத் திறக்கும் படி ஆவியானவரைக் கேட்கும் போது, தேவன் நம்மில் செயல்படுகின்ற விதங்களை புரிந்து கொள்ள முடியும். இதனையே பவுலும் எபேசு சபை விசுவாசிகளுக்கு எழுதுகின்றார். இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர்,  தம்மை அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும்  தருகின்ற ஆவியை அவர்களுகளுக்கு கொடுக்க வேண்டுமென கேட்கின்றார் (எபே. 1:17). மேலும், நமக்கு உண்டாயிருக்கிற சுதந்திரத்தினுடைய ஐசுவரியம் இன்னதென்றும், தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும் அறியும்படிக்கு தேவன் நமக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென வேண்டிக் கொள்கின்றார் (வ.18-19).

தேவன் நம்மிலும், நம் மூலமாகவும் செயல்படுவதை நாம் காணும் படி தேவனுடைய ஈவாகிய கிறிஸ்துவின் ஆவியானவர் நம்மை விழிப்புள்ள வர்களாக்குகின்றார். முன்னொரு நாள் அலுவலகமாக காட்சியளித்த்தை, இப்பொழுது தேவனுடைய ஒளியையும், மகிமையையும் வெளிப்படுத்தும் இடமாக உணர்த்துகின்றார்.

இயேசுவின் வருகையை எதிர்பார்த்து வாழ்

பாடகர் டிம் மெக்ரா எழுதிய “நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழ்” என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மனிதன் தன்னுடைய சாவு நெருங்கி விட்டது எனத் தெரிந்து கொண்ட போது, அவன் செய்த நீண்ட வரிசையான காரியங்களை அப்பாடல் விளக்குகிறது. அவன் பிறரை எளிதாக நேசிக்கவும், மன்னிக்கவும் தெரிந்து கொண்டான், பிறரிடம் கனிவாகப் பேசக்கற்றுக் கொண்டான். நம்முடைய வாழ்வும் சீக்கிரத்தில் முடிந்து விடும் என்று தெரிந்து கொண்டு வாழ்ந்தால் நாமும் நன்றாக வாழ முடியும் என்பதை அப்பாடல் விவரிக்கின்றது.

நம்முடைய காலம் மிகவும் குறுகியது என்பதை இப்பாடல்  நமக்கு நினைப்பூட்டுகிறது. இன்றைக்கு செய்யக் கூடியவற்றை, நாளை என்று தள்ளி  போடாமல் இன்றே செய்வது அவசியம், ஏனெனில்  நாளை நமக்கு கிடைக்காமல் போகலாமே. இயேசுவின் வருகை எந்நேரமும் இருக்கலாம் என நாம் விசுவாசிக்கின்றோம்.(ஒரு வேளை இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட) மணவாளன் வரும் போது ஆயத்தமில்லாமலிருந்த ஐந்து “புத்தியில்லாத” கன்னிகைகளைப் போன்று அல்லாமல் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் படி தேவன் நம்மைத் தூண்டு கின்றார் (மத்தேயு 25;6-10)

மெக்ராவின் பாடல் முழுமையான கதையை நமக்கு வெளிப்படுத்த வில்லை. இயேசுவை நேசிப்பவர்களாகிய நாம் நாளை நமக்கு கிடைக்கவில்லையேயெனத் தவிப்பவர்கள் அல்ல. “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிற எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவா. 11:25-26) என இயேசு கூறியுள்ளார். அவருக்குள் நம்முடைய வாழ்வு ஒருபோதும் முடிவதில்லை.

எனவே, நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழாதே. ஏனெனில் நம்முடைய வாழ்வு முடிவதில்லை. ஆனால் இயேசுவின் வருகையை எதிர் நோக்கி வாழ். அவர் சீக்கிரம் வருகின்றார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார். 

 

இயேசுவின் அதிகாரம்

பல வருடங்களாக போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்த என் மகன் ஜியோப்பை இயேசு விடுவித்த பிறகும், எனக்கு இன்னும் சில கவலைகள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், அவனுடைய எதிர்காலத்தைவிட அவனுடைய கடினமான கடந்த காலத்தைக் குறித்து நான் அதிக கவலைப்பட்டேன். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் சரிசெய்யவேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓர் குடும்பக் கூடுகையில் நான் ஜியோப்பை பிடித்து இழுத்து, அவனிடம், “நமக்கு ஒரு எதிரி இருக்கிறான். அவன் மிகவும் வலிமையானவன் என்பதை புரிந்துகொள்” என்றேன். அவனும் “எனக்கு தெரியும் அப்பா, அவனுக்கு வலிமை இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தான். 

அந்த தருணத்தில், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, அவரை நாடுகிறவர்களின் வாழ்க்கையை மறுரூபமாக்குகிற இயேசுவை நான் நினைவுகூர்ந்தேன். அவர் பரமேறி செல்வதற்கு முன்பு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்...” (மத்தேயு 28:18-19) என்று கொடுக்கப்பட்ட கட்டளையையும் நான் நினைவுகூர நேரிட்டது. 

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு, நமது கடந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அவரிடத்தில் வருவதற்கு வழி செய்துள்ளார். அவர் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருப்பதால் (வச. 20), அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்றும், நம்முடைய ஜீவியம் அவரது பலத்த கரங்களில் உள்ளது என்றும் நாம் உறுதியாக நம்பலாம். நாம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நல்ல நம்பிக்கையை இயேசு நமக்கு தருகிறார். பிசாசும் உலகமும் தற்காலிகமான இவ்வுலகத்தில் சில வல்லமைகளைக் கொண்டு செயலாற்றலாம். ஆனால் “சகல அதிகாரமும்” என்றென்றும் இயேசுவுக்கே சொந்தமானது. 

 

தேவனை நேசிக்காமல் இருக்கமுடியாது

தற்போது வளர்ச்சிப்பெற்றுள்ள என்து மகன் சேவியர், மழலையர் பள்ளியில் இருந்தபோது, அவன் கைகளை அகல விரித்து, “நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று சொன்னான். நானும் என் நீண்ட கைகளை விரித்து, “நானும் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று பதிலுக்கு சொன்னேன். அவன் தன் கைகளை தன் இடுப்புப் பகுதியில் வைத்தவாறு, “நான் தான் உன்னை முதலில் நேசித்தேன்” என்றான். நான் தலையை அசைத்து ஆமோதித்தேன். “தேவன் முதலில் உன்னை என் கருவில் வைத்தபோதே நான் உன்னை நேசித்தேன்” என்றேன். சேவியரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. “நீங்கள் வெற்றி பெற்றீர்கள்” என்றான். “இயேசு நம் இருவரையும் முதலில் நேசித்ததால், நாம் இருவருமே வெற்றிபெறுகிறோம்” என்று நான் சொன்னேன்.

சேவியர் தனது முதல் குழந்தையின் பிறப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கும்போது, அவன் தனது மகனை பிற்காலத்தில் நினைவுகூரும்போதெல்லாம் அவன்மீது அன்புசெலுத்தியதில் மகிழ்ச்சியடையவேண்டும் என்று நான் வேண்டுதல்செய்கிறேன். ஆனால் நான் ஒரு பாட்டியாகத் தயாராகும்போது, சேவியரும் அவருடைய மனைவியும் ஓர் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று என்னிடம் சொன்ன தருணத்திலிருந்து நான் என் பேரனை எவ்வளவு நேசித்தேன் என்று ஆச்சரியப்படுகிறேன்.

இயேசு நம்மீது வைத்திருக்கும் அன்பு, அவரையும் மற்றவர்களையும் நேசிக்கும் திறனை நமக்குத் தருகிறது என்று அப்போஸ்தலர் யோவான் உறுதிப்படுத்துகிறார் (1 யோவான் 4:19). அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை அறிவது, அவருடனான நமது தனிப்பட்ட உறவை ஆழப்படுத்தும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது (வச. 15-17). அவர் நம்மீது வைத்துள்ள அன்பின் ஆழத்தை நாம் உணர்ந்துகொள்ளும்போது (வச. 19), நாம் அவருக்கான அன்பில் வளரலாம். மேலும் பிற உறவுகளில் அன்பை வெளிப்படுத்தலாம் (வச. 20). அன்பு செய்வதற்கு இயேசு நமக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், அன்பு செலுத்தும்படியும் கட்டளையிடுகிறார்: “தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்” (வச. 21). யார் அதிகம் நேசிக்கிறவர்கள் என்று வரும்போதெல்லாம், தேவனே எப்போதும் வெற்றிபெறுகிறார். நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், நேசிப்பதில் தேவனை ஜெயிக்கமுடியாது.